தென்கொரியா படங்களை பார்த்த 2 சிறுவர்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றம்: வடகொரியா அரசு அதிரடி

வாஷிங்டன்: தென் கொரியா படங்களை பார்த்ததாக 2 சிறுவர்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனையை வடகொரியா அரசு நிறைவேற்றியுள்ளது. உலகின் மிகவும் மர்மமான நாடு வடகொரியா தான். அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றியோ அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் பற்றியோ வெளி உலகத்திற்கும் எதுவும் நிச்சயமாக தெரியாது. வெளிநாட்டு சினிமாக்களுக்கு தடை, தொலைக்காட்சிகளுக்கு தடை என பெரும் சர்வாதிகார ஆட்சியே நடக்கிறது. விதிகளை மீறினால் மிக கடுமையான தண்டனை விதிக்கப்படும். கடந்தாண்டு கிம் ஜான் உன்னின் தந்தை உயிரிழந்ததன் துக்கம் அனுசரிக்கப்பட்டது. துக்கம் அனுசரிக்கப்பட்ட 11 நாட்கள், பொதுமக்கள் சிரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடைகளுக்கு செல்லக் கூடாது. குடிக்க கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது.

இணையதளங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதித்த இணையதளங்களை மட்டுமே பார்க்க முடியும். அரசு சொல்லும் செய்திகள் மட்டுமே ஒளிபரப்பாகும். இதையும் மீறி வடகொரியாவின் அண்டை நாடும் பரம எதிரி நாடாகவும் உள்ள தென்கொரிய நாட்டு நாடகங்கள், சினிமாக்கள் வடகொரியாவில் பிரபலம் ஆகி வருகின்றன. இதனால், தென்கொரிய டிராமா ஷோக்கள் ப்ளாஷ் டிரைவ் போன்ற கருவிகள் மூலமாக கடத்தல் முறையில் வடகொரியாவிற்குள் கொண்டு வரப்படுகின்றன. தண்டனையில் இருந்து தப்புவதற்காக யாருக்கும் தெரியாமல் பூட்டிய வீட்டிற்குள் இருந்து கொண்டு இத்தகைய வீடியோக்களை வடகொரிய மக்கள் பார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் படங்களை பார்த்ததற்காக 16 மற்றும் 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு மரண தண்டனையை வடகொரியா பொதுவெளியில் நிறைவேற்றியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கொரியாவின் மிக பிரபலமான தொடரான கே-டிராமாக்கள் பார்ப்பதற்கு வடகொரியாவில் தடை உள்ளது. அதையும் மீறி இந்த தொடர்களை பார்த்த குற்றத்திற்காக இருவருக்கும் பொது வெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதம் நடந்த இச்சம்பவம், கடந்த வாரம்தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Related Stories: