கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்களை காக்க முக்கடல் சங்கமத்தில் பாதுகாப்பு மிதவை

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி ஐயப்ப சீசன் தொடங்கியது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வண்ணம் உள்ளனர். இப்படி வரும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் முக்கடல் சங்கம கடலில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

பின்னர் பூம்புகார் படகில் சென்று விவேகானந்தர் பாறையை கண்டு ரசிக்கின்றனர். இதுதவிர விடுமுறை தினமான சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கன்னியாகுமரியில் குவிகின்றனர். இதனால் கூட்டம் கட்டுக்காடாமல் காணப்படுகிறது.

இந்த நிலையில் கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி முக்கடல் சங்கம கடலில் பாதுகாப்பு மிதவை விடப்பட்டு உள்ளது. அதிகாலையில் முக்கடல் சங்கமத்தில் குளிக்கும் ஐயப்ப பக்தர்கள் கடலில் ஆழத்தை அறியாமலும், அலைவேகம் மற்றும் பாறைகளை கணக்கிட முடியாலும் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றனர்.

மேலும் ஒருசில அசம்பாவித சம்பவங்களும் நிகழ்கின்றன. இதை தடுக்கும் வகையில், பேரூராட்சி சார்பில் கடலில் பாதுகாப்பு மிதவைபோடப்பட்டுள்ளன. இது ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகின்றன. கடலில் இந்த மிதவைகளை தாண்டி செல்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் திரிவேணி சங்கம பகுதியில் எச்சரிக்ைக போர்டும் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: