ஐஏஎஸ், ஐ.பி.எஸ். மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு இந்திய அளவில் 2,529 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 110 பேர் வெற்றி பெற்று சாதனை

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் மற்றும் ஐ.எப்.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு ரிசல்ட் நேற்றிரவு வெளியிடப்பட்டது. இத்தேர்வில் இந்திய அளவில் 2,529 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 110 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். நேர்முக தேர்வு டெல்லியில் நடைபெறவுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுவுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2022ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1,011 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

இத்தேர்வை சுமார் 5.5 லட்சம் பேர் எழுதினர். தேர்வு நடைபெற்ற 17 நாட்களில், அதாவது ஜூன் 22ம் தேதி முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் சுமார் 13,090 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 610 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த செப்டம்பர் 16, 17, 18, 24 மற்றும் 25ம் தேதி ஆகிய 5 நாட்கள் நடந்தது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடந்தது. இந்த நிலையில் மெயின் தேர்வுக்கான ரிசல்ட் நேற்றிரவு வெளியானது. இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகடாமி இயக்குனர் வைஷ்ணவி கூறியதாவது: மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) சிவில் சர்வீஸ் பணிக்கான மெயின் தேர்வை இணையதளமான www.upsc.gov.inல் வெளியிட்டுள்ளது.

மெயின் தேர்வில் இந்தியா முழுவதும் 2,529 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து சுமார் 110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சங்கர் ஐஏஎஸ் அகடாமியின் சென்னை பயிற்சி மையத்தில் 72 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை பெங்களூர், திருவனந்தபுரம் மையத்தில் பயற்சி பெற்ற 540 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நேர்காணல் தொடங்கும். இதில் தேர்ச்சி பெறுவோர் அவர்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும். யாருக்கு என்ன பதவி என்பது குறித்து அதன் பிறகு தெரிய வரும். பதவிகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கு முசோரி பயிற்சி மையத்தில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எங்கள் மையத்தில் இலவச நேர்காணலே நடத்தவுள்ளோம்.

Related Stories: