அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை ‘பாரதி யார்’-இயல், இசை நடன வரலாற்று நாடகம்: அமைச்சர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைப்பு

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரும் 7ம் தேதி நடைபெறும் ‘பாரதி யார்’ இயல், இசை, நடனம் கலந்த வரலாற்று நாடகத்தை அமைச்சர்கள் சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கின்றனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ‘பாரதி யார்’ இயல், இசை, நடனம் கலந்த வரலாற்று நாடகம் வரும் 7ம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மக்கள் நல்வாழ்வுத் துறை மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கின்றனர்.

பாரதியார் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டு நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் நாள், அரசின் சார்பில் ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைப்பிடிக்கப்பட்டு வருவது போன்று அனைத்து அறிவிப்புகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் அறிவிப்பினை மிகச்சிறப்பாக செயல்படுத்திடும் பொருட்டு எஸ்.பி.கிரியேசன்ஸ் தயாரிப்பில் எஸ்.பி.எஸ்.ராமன் குழுவினரின் ‘பாரதி யார்’ இயல், இசை, நடனம் கலந்த வரலாற்று நாடகம் முதற்கட்டமாக சென்னையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடத்தப்பட உள்ளது. இந்நாடகம் இணையவழியிலும், அரசு கேபிள் டிவியிலும் ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: