1500 பேருக்கு தையல் மெஷின்: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

ஆவடி: ஆவடி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று 1500 பேருக்கு தையல் மெஷின் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு, ஆவடி தொகுதிக்கு உட்பட்ட 7வது மற்றும் 9வது வார்டு பகுதிகளில் வசிக்கும் 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஆவடியில் மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று, 2 வார்டுகளை சேர்ந்த 1500 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தையல் மெஷின் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் 48வது வார்டில் மழையால் சேதமான சாலைகளை சீரமைக்கும் பணிகளை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார். முன்னதாக நிருபர்களை சந்தித்து அமைச்சர் சா.மு.நாசர் கூறுகையில், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் கனமழையால் சேதமான தெரு மற்றும் முக்கிய பிரதான சாலைகளை சீரமைக்க ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக திருமுல்லைவாயல், மணிகண்டபுரம் பகுதி பிரதான சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது என்று தெரிவித்தார். இதில் ஆவடி மாநகர செயலாளர் ஆசிம்ராஜா, ஆணையர் தர்ப்பகராஜ், பகுதி செயலாளர்கள் பேபி சேகர், ராஜேந்திரன், பொன்விஜயன், நாராயண பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: