ஆதம்பாக்கம் ஜீவன் நகரில் ரூ.5 கோடியில் பாலம் கட்ட பூமிபூஜை

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் ஜீவன் நகரில் ரூ.5 கோடியில் பாலம் கட்டும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பசன், மேயர் பிரியா பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனர். ஆலந்தூர் மண்டலம், 161வது வார்டு ஆதம்பாக்கம் ஜீவன் நகர் 2வது தெரு மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை வழியாக செல்லும் ஏரிக் கால்வாயை இணைக்கும் வகையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பாலம் கட்டும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி  வைத்தார். விழாவிற்கு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி, ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், வார்டு ரேணுகா சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

பின்னர், அமைச்சர்  தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறுகையில், ``ஆதம்பாக்கம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான மேம்பாலம் கட்டுவதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2 வருடங்களுக்குள் இந்த பாலம் காட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடத்திருப்பது அதிமுக ஆட்சி காலத்தில் நடந்தது. சிக்கராயபுரம் கல்குவாரியை நீர்த்தேக்கமாக மாற்றுவது குறித்து திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து, அறிவிப்பு அடுத்து வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் வெளியாகும்” என்றார். நிகழ்ச்சியில், மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன், செயற்பொறியாளர்கள் முருகவேல், வளர்மதி, ராமமூர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர்கள் பூங்கொடி, ஜெகதீஸ்வரன், சாலமோன், துர்காதேவி, நடராஜன், தேவி யேசுதாஸ், பகுதி திமுக செயலாளர் பி.குணாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: