பிரபல ஓட்டல் கேசரியில் வண்டு: பெரவள்ளூரில் பரபரப்பு

பெரம்பூர்: பெரவள்ளூரில் பிரபல ஓட்டலில் வழங்கப்பட்ட கேசரியில் வண்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருமங்கலம் அண்ணா தெருவை சேர்ந்தவர் தசரதராமன் (29). இவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். இவர் தனது நண்பர்கள் 8 பேருடன் பெரவள்ளூர் சிவஇளங்கோ சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்தவுடன் தசரதராமன் கேசரி ஆர்டர் செய்துள்ளார். அதை ஊழியர் கொண்டு வந்து கொடுத்தபோது அதில் வண்டு இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் முறையான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ‘உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுங்கள்’’ என்று போலீசார் தெரிவித்ததையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஓட்டலில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: