செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு; பதிவேடுகளை முறையாக பின்பற்றிய எழுத்தருக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதி: டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு செய்து, காவல் நிலைய பதிவேடுகளை முறையாக பின்பற்றிய எழுத்தருக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கினார். சென்னை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவல் நிலையத்தில் உள்ள சரித்திர பதிவேடுகள், குற்றச் சம்பந்தப்பட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும், சமீபத்தில் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் என்ன மாதிரியான குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளார்கள் என்றெல்லாம் காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் எழுத்தர் ராஜாமணியிடம் விசாரித்தார்.

பின்னர், காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள், காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து, உடல்நலம் குறித்தும் விசாரித்தார். இறுதியில், காவல் நிலையத்தில் பதிவேடு அனைத்தும் முறையாக பின்பற்றி இருந்ததால் காவல் நிலைய எழுத்தர் ராஜாமணிக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதியை டிஜிபி சைலேந்திரபாபு  வழங்கினார். பின்னர், அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது, பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையா, செம்மஞ்சேரி சரக உதவி ஆணையர் ரியாசுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: