பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவதாக மிரட்டி சுய உதவிக்குழு நிர்வாகியிடம் ரூ.42 ஆயிரம் துணிகர வழிப்பறி: முகமூடி ஆசாமிக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னை தேனாம்பேட்டை நக்கீரன் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் புனிதா (38). சுய உதவிக்குழு நிர்வாகியாக உள்ளார். இவர், நேற்று காலை சுய உதவிக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் கொடுத்த பணத்தை, தனது வீட்டின் முன்பு அமர்ந்து எண்ணிக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை புனிதா மீது ஊற்றி எரித்து விடுவேன் என மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.42 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத புனிதா திருடன் திருடன் என உதவி கேட்டு கத்தினார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் முகமூடி ஆசாமி பணத்துடன் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து புனிதா ேதனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நக்கீரன் நகரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று மர்ம நபரை தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பெண் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பிய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: