சென்னை: நடிகர் சூரி புகாரின் பேரில் முன்னாள் டிஜிபி மீது பதிவான வழக்கின் புலன் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தந்து மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா, திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் உள்ளிட்டோர் மீது போலீசில் நகைச்சுவை நடிகர் சூரி புகார் செய்தார். இந்த புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்புவேல் ராஜன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.