புதுடெல்லி: டெல்லி மாநகராட்சிக்கு வரும் 4ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில், பாஜ, ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று அளித்த பேட்டியில், ‘பாஜ எம்பி மனோஜ் திவாரி, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த பேச்சின் மூலம் கெஜ்ரிவாலை கொலை செய்வதற்கான சதி திட்டம் தெரிகிறது. குஜராத், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜ.வுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு விட்டது. அதனால்தான் கெஜ்ரிவாலை கொல்ல திட்டமிட்டுள்ளனர். கொலை மிரட்டல் விடுத்த திவாரியை உடனே கைது செய்ய வேண்டும்,’ என்றார்.