புதுடெல்லி: ‘அமெரிக்காவிடம் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என முன்னாள் ராணுவ தளபதி பிக்ரம் சிங் எச்சரித்துள்ளார். எஸ்பிஐ வங்கி மற்றும் பொருளாதார மாநாடு நேற்று முன்தினம் நடந்தது.
இதில், முன்னாள் இந்திய ராணுவ தளபதி பிக்ரம் சிங் பேசுகையில்: உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடான அமெரிக்கா இன்னும் நெருங்கிய நட்பு நாடுகளின் மீதான நம்பகத்தன்மையை நிரூபிக்கவில்லை. குவாட் குழுவில் இந்தியா உறுப்பினராக இருந்தாலும், அமெரிக்காவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உடனான தனது உறவை அமெரிக்கா வலுப்படுத்தி வருகிறது. எப்போதும் அமெரிக்காவுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஏனெனில், அமெரிக்கா ஒருபோதும் நட்பு நாடுகளுடன் நம்பகமானதாக இருந்தது இல்லை. முதலில் வியட்நாம் போரில் இருந்து அமெரிக்கா விலகி கொண்டது. பின்னர், ஈராக்கில் இருந்து 2 முறையும், தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்தும் விலகிக் கொண்டது. வெளிநாடுகளில் நடந்த அமெரிக்காவின் ராணுவ தலையீடுகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன,’’ என்றார்.