தமிழக மூத்த தலைவர்கள் கார்கேவுடன் சந்திப்பு எதிரொலி தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்ல பிரசாத்திடம் விசாரணை நடத்த கட்சி தலைமை முடிவு: கே.எஸ்.அழகிரிக்கும் நோட்டீஸ் அனுப்ப மூத்த தலைவர்கள் மேலிடத்துக்கு அழுத்தம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கார்கேவுடன் சந்தித்ததன் எதிரொலியாக தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோரிடம் விசாரணை நடத்த டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியில் நடந்த மோதல் விவகாரம் டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. சத்தியமூர்த்தி பவனுக்குள் கட்சியினரை தாக்குவதற்கு வெளியில் இருந்து குண்டர்களை வரவழைத்தது தான் தற்போது தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் என்றால், ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு வரும் 24ம்தேதி ரூபி மனோகரன் எம்எல்ஏ மற்றும் எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமார் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.

குழுவின் தலைவராக உள்ள கே.ஆர்.ராமசாமியிடம் விளக்கம் கேட்டு, அதன் அடிப்படையில் அவர்கள் மீது எடுக்கப்பட உள்ள நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, செல்வப்பெருந்தகை ஆகியோர், ‘சொந்த கட்சியினரை குண்டர்களை வரவழைத்து தாக்கிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை தலைவர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி டெல்லியில் முகாமிட்டனர்.

அப்போது, அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து நடந்த சம்பவத்தை விரிவாக கூறினர்.  அதில், கே.எஸ்.அழகிரியின் நடவடிக்கை, கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகவும், வெளியாட்கள் மூலம் காங்கிரசாரை தாக்கியதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக, மல்லிகார்ஜூன கார்கேவும் தனிப்பட்ட முறையில் சத்தியமூர்த்தி பவன் மோதல் தொடர்பாக விசாரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சம்பவத்தன்று சத்தியமூர்த்தி பவனில் இருந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்கள் தினேஷ் குண்டுராவ் மற்றும் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோரிடம் விளக்கம் கேட்கவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் இவர்களிடம் விசாரணை நடத்தி மோதல் தொடர்பான அறிக்கையை தயார் செய்ய உள்ளார். இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘ஒழுங்கு நடவடிக்கை குழுவானது வரும் 24ம்தேதி இருவரிடம் விசாரிக்க உள்ளது. மாவட்ட தலைவர்கள் தீர்மானம் போட்டு, அதை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பியது தவறு.

அதை வைத்து இரண்டு பேருக்கு மட்டும் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியது தவறு. இந்த சம்பவத்தில் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் அனுப்ப வேண்டும். சத்தியமூர்த்தி பவனில் இதுபோன்ற போராட்டங்கள் எத்தனையோ நடந்துள்ளது. மோதலை தூண்டி விட்டவர்கள் யார், கட்சியினரை தாக்கியது யார் என்பதை தான் பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால், கே.எஸ்.அழகிரிக்கு தான் முதலில் நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. இது தொடர்பாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டெல்லி க்கு கோரிக்கை வைத்துள்ளனர்’’ என்றார்.

Related Stories: