ஷரத்தா கொலை வழக்கை சிபிஐ.க்கு மாற்ற மறுப்பு: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் இளம்பெண் ஷரத்தா 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மும்பையை சேர்ந்த ஷரத்தா என்ற இளம்பெண், தனது காதலன் அப்தாப்புடன் டெல்லியில் லிவ்-இன் வாழ்க்கை நடத்தி வந்தார். கடந்த மே மாதம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் ஷரத்தா கொல்லப்பட்டார். அவருடைய உடலை 35 துண்டுகளாக வெட்டி, டெல்லி முழுவதும் அப்தாப் வீசினார். இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அவனை கைது செய்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ.யிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி காவல்துறை சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மூத்த காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் 80 சதவீத விசாரணை முடிந்து விட்டதால், இந்த வழக்கை சிபிஐ.க்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை,’ என தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘வழக்கை டெல்லி காவல்துறையிடம் இருந்து சிபிஐ.க்கு மாற்ற சரியான காரணம் இல்லை,’ என கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: