இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நவ.15-ம் தேதி செல்வமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் நெடுந்தீவு அருகே கடந்த 17-ம் தேதி இரவு மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, விசைப்படகுடன் 14 மீனவர்களையும் கைது செய்து, காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர்.

இதை தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்வதுடன், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மீன்பிடி படகை அரசுடமையாக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்களும் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: