அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும் மோடி, அமித்ஷா தான் இயக்க போகிறார்கள்: தமிழக காங்கிரஸ் தலைவர் பேட்டி

சென்னை: ‘அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும் மோடி, அமித்ஷா தான் கூட்டணியை இயக்கப்போகிறார்கள்’’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் இலக்கிய அணி நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். தொடர்ந்து கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: ஒரு சட்டமன்றத்துக்கு நூறு இடங்களில் கட்சி கொடி ஏற்ற என முடிவு எடுத்துள்ளோம். அந்த பணிகள் இந்திரா காந்தியின் பிறந்த நாளிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணம் மூலமாக இந்திய அரசியலில் ஒரு புதிய விடியல் கிடைத்துள்ளது.

அதனை தமிழகத்திலும் மேம்படுத்தும் விதமாக முதல் கட்டமாக 100 கொடிகளை ஒவ்வொரு தொகுதிகளில் ஏற்ற முடிவு செய்தாலும், இது முடிந்த பிறகு இரண்டாவது கட்டமாக நூறு கொடிகள் ஏற்றவும் முடிவு செய்துள்ளோம். காசி தமிழ்ச் சங்கத்தின் நிகழ்வில் மோடி பங்கேற்றிருந்தாலும் பாஜ அதனை உரிமை கொண்டாட முடியாது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை செலவு செய்து 200 பேரை காசிக்கு அனுப்பியுள்ளது. நியாயமாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு தான் பெருமை சேரும். பாஜ இதில் உரிமைக் கொண்டாட நினைப்பது வாடகை வீட்டுக்கு உரிமை கொண்டாடுவது போல் ஆகும்.

அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும் இயக்கப் போவது மோடி, அமித்ஷா தான். அதிமுக தற்போது மோடியின் மறு உருவமாக உள்ளது. அதிமுக வேறு இயக்கத்தில் நடித்து தான் வருகிறது. அதனால் தமிழகத்தில் பழைய வலிமையை அதிமுக பெற முடியாது. ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்வதால் மக்களிடம் உள்ள வரவேற்பைப் பார்த்து பலர் அச்சத்தில் மிரண்டு போய் உள்ளனர். அவரை தடுத்து நிறுத்தவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: