வாஷிங்டன்: அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் கொலராடோ ஸ்பிரிங்சின் புறநகரில் சிறிய ஷாப்பிங் மால் அமைந்துள்ளது. இங்கு, கிளப் க்யூ என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு கேளிக்கை விடுதி செயல்படுகிறது. இங்கு நேற்று அதிகாலை 4 மணி அளவில் துப்பாக்கிச்சூடு நடப்பதாக போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது, சம்பவ இடத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு 5 பேர் உயிரிழந்து கிடந்தனர். 18 பேர் காயத்துடன் இருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயத்துடன் இருந்தவர்களில் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தியவனாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். ஆனால், இந்த துப்பாக்கிச்சூடு எப்படி நடந்தது, எப்படி முடிவுக்கு வந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அதே சமயம் இரவு விடுதியின் பேஸ்புக் பதிவில், ‘எங்கள் சமூகத்தின் மீதான புத்தியில்லாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டை அடக்கி, இந்த வெறுப்பு தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்த எங்களின் வீர வாடிக்கையாளர்களுக்கு நன்றி,’ என கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக நடத்தப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.