தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங். தலைவர் திடீர் ராஜினாமா: கே.எஸ்.அழகிரி மீது பரபரப்பு குற்றச்சாட்டு

கோவில்பட்டி: கட்சிப் பொறுப்புகளுக்கு பணம் வாங்கப்படுவதாகவும், மாநிலத் தலைவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி மாவட்டத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர், கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:

காங்கிரசில் உட்கட்சி தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை. பணம் வாங்கிக் கொண்டு பொறுப்புகள் போடப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர்களுக்கு தெரியாமல், கலந்தாலோசிக்காமல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 15ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த பிரச்னை தொடர்பாக மாவட்ட தலைவர்களிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல், கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளனர்.

ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது கண்டித்து ஒரு அறிக்கை கூட மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிடவில்லை. அவர், தன்னுடைய கோரிக்கை மட்டும் பெரிது என்று நினைக்கிறார். கட்சி வளர்ச்சி தொடர்பாக கேட்க வரும் தொண்டர்களை அடிக்கும் நிலை, காங்கிரஸ் கட்சியில் உள்ளது. எனவே மாவட்ட தலைவர் பதவியில் தொடர நான் விரும்பவில்லை. ராஜினாமா தொடர்பாக மாநிலத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: