அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது; கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பால பணி: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ நேரில் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேல்விளாகம், கலியனூர், மணவூர், விடையூர், நெமிலி அகரம் உள்ளிட்ட கிராம மக்கள் 20 கிமீ தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பணியை ஆய்வு செய்து விரைந்து முடிக்க வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ அறிவுறுத்தினார். அதிமுக ஆட்சியில் 2016-17ம் ஆண்டு ரூ.3.60 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்பால பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு முடிக்கப்படாமல் இருந்தது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதையறிந்த வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, அந்த மேம்பாலத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கட்டி முடிக்கப்படாமல் உள்ள மேம்பாலத்தை விரைந்து முடிக்க பொதுப்பணித் துறையினருக்கு அறிவுறுத்தினார். அதன்பேரில் பொதுப்பணி துறையினர், மேம்பாலத்தின் இருபுறங்களிலும் ஜேசிபி இயந்திரத்தை வைத்து தற்காலிகமாக மணல்மேடு அமைத்து அப்பகுதி மக்கள் சென்று வருவதற்கான ஏற்பாடுகளை செய்தார்.இதையடுத்து நெமிலி அகரம் பகுதியிலும் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக எம்எல்ஏ தெரிவித்துள்ளார். ஆய்வின்போது திமுக ஒன்றிய செயலாளர்கள் கொண்டஞ்சேரி ரமேஷ், அரிகிருஷ்ணன், கூளூர் ராஜேந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: