கிருஷ்ணா மாவட்டத்தில் பரபரப்பு புல் மப்பில் நடுரோட்டில் வேனை நிறுத்தி மட்டையான டிரைவர்-கல்லூரி மாணவிகள் அவதி

திருமலை : கிருஷ்ணா மாவட்டத்தில் புல் மப்பில் நடுரோட்டில் வேனை நிறுத்தி டிரைவர் மட்டையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கல்லூரி மாணவிகள் அவதிப்பட்டனர்.ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பால்மேரு மண்டலத்தில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

மாணவர்கள் வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்த பிறகு அவரவர் வீட்டிற்கு செல்ல கல்லூரி பஸ்சில் ஏறினர்.

இந்த பஸ்சை பாலையா என்ற  டிரைவர் ஓட்டி வந்தார். ஏற்கனவே குடிபோதையில் புல் மப்பில் இருந்த பாலையா பஸ்சை ஸ்டார்ட் செய்து ஓட்டி சென்றார். குடிபோதையில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறுமாறாக ஓட்டி சென்றார். மச்சிலிப்பட்டினம்- விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் பால்மேரு அடுத்த கணுமுரு என்ற இடத்தில் வந்தபோது மாணவர்கள்  குடிபோதையில்  இருந்த ஓட்டுநரை பார்த்து சத்தம் போட்டனர். உடனே பயத்தில் அலறியடித்த பாலையா பஸ்சை நிறுத்தி விட்டு சாலையில் படுத்துக் கொண்டார்.

இதனால், பதற்றமடைந்த மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்கி கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  ஏற்கனவே அந்த இடத்திற்கு வந்த அப்பகுதிமக்கள் டிரைவரின் நிலையை கண்டு பால்மேரு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தனியார் கார்ப்பரேட் கல்லூரி  பொறுப்பற்ற டிரைவரின் கைகளில் மாணவிகளின் உயிரை பணயம் வைத்து அனுப்பியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.  எதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு? என பெற்றோர்கள் கோபமடைந்தனர். இவ்வளவு நடந்தும்  கல்லூரி பிரதிநிதிகள் தங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை என்பது போல் பேசியது பெற்றோரையும், அப்பகுதி மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

Related Stories: