மோடி, அமித்ஷாவை யாரும் பார்க்கலாம்: எடப்பாடிக்கு அண்ணாமலை பதிலடி

சீர்காழி: மோடியையும், அமித்ஷாவையும் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என எடப்பாடி பழனிசாமிக்கு, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: தமிழக அரசு, மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது போதாது, ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வேலையில்லாமல் உள்ள குடும்பங்களுக்கு 30 நாட்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கால நீடிப்பு செய்ய  வேண்டும். இதற்காக டெல்லி சென்று கருப்பு முருகானந்தம் தலைமையில் ஒரு குழு அமைத்து இரண்டு நாட்களில் நிதி அமைச்சரையும் வேளாண் துறை அமைச்சரையும்  சந்தித்து முறையிட உள்ளனர். முதலமைச்சர் அறிவித்துள்ள நிவாரணத்தொகை அனைத்தும் ஒன்றிய அரசு கொடுக்கின்ற நிதியிலிருந்து வருகிறது. எனவே ஒன்றிய அரசு கொடுக்கின்ற நிதியோடு மாநில அரசும் சேர்த்து கூடுதலாக கொடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றி கேட்டதற்கு, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சாதாரண மக்கள் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று அண்ணாமலை பதில் அளித்தார். 2024 மெகா கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு ஒரு சதவீதம் கூட இடமில்லை என எடப்பாடி கூறியது பற்றி கேட்டதற்கு, இது தொடர்பாக கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. அண்ணன் எடப்பாடி இங்கு வந்திருந்து, பத்திரிகை நண்பர்களை சந்தித்துள்ளார். குறிப்பாக இன்னொரு கட்சியை பற்றி பேசி உள்ளார். இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டியது அவரிடம்தான் என்றார் அண்ணாமலை.

Related Stories: