புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே கிள்ளனூர் பகுதியில் கடந்த 14ம் தேதி சாலையோரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பொருட்களை திருடிக் கொண்டு ஒரு கும்பல் ஆட்டோவில் தப்பி செல்வதாக கருதி அப்பகுதி இளைஞர்கள், ஊர் மக்கள் சுமார் 20 பேர் இரு சக்கர வாகனங்களில் ஆட்டோவை சுமார் 25 கி.மீ தொலைவுக்கு விரட்டி வந்து, கணேஷ்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மச்சுவாடி ஜீவா நகரில் ஆட்டோவை மறித்து, அதில் இருந்தவர்களை கட்டைகளால் சரமாரி தாக்கினர். இதில் ஆட்டோவில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் 6 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த சத்திய நாராயணசாமி (48), இவரது மனைவி லில்லி புஷ்பா(38) மற்றும் இவர்களது மகன்கள் விக்னேஷ்வரசாமி(19), சுபமெய்யசாமி(19), மகள்கள் கற்பகாம்பிகா(10), ஆதிலட்சுமி(8) என தெரிய வந்தது. இவர்களில் தலையில் படுகாயமடைந்த கற்பகாம்பிகா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரையும் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாக கணேஷ் நகர் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தனர்.