உர கொள்ளைக்கு உடந்தை காங். எம்எல்ஏ மீது வழக்கு: மபி போலீஸ் நடவடிக்கை

ரத்லாம்: மத்தியப் பிரதேசத்தில் விநியோக மையத்தில் இருந்து உரத்தை கொள்ளையடிப்பதற்கு உதவியதாக காங்கிரஸ் எம்எல்ஏ மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் ரத்லாம் மாவட்டத்தில் உள்ள அரசு உர விநியோக மையத்தில் இருந்து உரம் கிடைக்கவில்லை என்று அலாட் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மனோஜ் சாவ்லாவிடம் விவசாயிகள் புகார் கொடுத்தனர். அது பற்றி தட்டி கேட்பதற்காக மனோஜ் அந்த உர மையத்துக்கு விரைந்தார்.

‘இணையதள கோளாறு காரணமாக ஆன்லைனில் உரத்தை விநியோகிக்க முடியவில்லை,’ என்று அவரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். ஆனால், இதை ஏற்க மறுத்த மனோஜ், உர மூட்டைகள் இருந்த அறையின் கதவை உடைத்து திறந்தார். அங்கு இருந்த உர மூட்டைகளை எடுத்து செல்லும்படி விவசாயிகளிடம் தெரிவித்தார். இதனால், விவசாயிகளும் உர மூட்டையை தூக்கிச் சென்றனர். இது தொடர்பாக உர மையத்தின் பொறுப்பாளர் கொடுத்த புகாரின் பேரில், உர கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக எம்எல்ஏ மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை மறுத்து மனோஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘வழக்கை கண்டு பயப்படமாட்டேன். தொடர்ந்து விவசாயிகளுக்காக போராடுவேன்,” என்றார்.

Related Stories: