மீஞ்சூர் அருகே அம்மா செட்டி குளத்தில் ஆகாய தாமரையை அகற்ற கோரிக்கை

பொன்னேரி: மீஞ்சூர் அருகே அம்மா செட்டி குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஆகாய தாமரையையும் அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீஞ்சூர் பேரூராட்சி அரியன் வாயல் பகுதியில் அம்மா செட்டிகுளம் உள்ளது. இந்த குளத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் குளத்தின் அளவு சுருங்கி விட்டது. மேலும், தற்போது பருவ மழை பெய்து வருவதால் ஆகாய தாமரையும் வளர்ந்துள்ளது. குளமே தெரியாத வகையில் ஆகாயதாமரை சூழ்ந்துள்ளது. இதனால் கால்நடைகளுக்கு தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

தற்போது, நீர் நிலைகளை ஆக்கிரமிப்பை அகற்றி அதனை சுத்தம் செய்து வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அம்மா செட்டி குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு, ஆகாய தாமரையையும் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சி அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தனர். இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி, குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், ஆகாயத்தாமரையும் அகற்றி குளத்தை தூர்வாரி கால்நடைகளுக்கு தண்ணீர் பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: