துரைப்பாக்கம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் கலந்துகொண்டு கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேசியதாவது: மனவலிமை மற்றும் ஆரோக்கியத்தில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். நாம் 40, 50 வயது அடையும் போதுதான் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். இந்த காலகட்டத்தில் நாம் அனைவருக்கும் ஒரு முக்கியமான இடற்பாடு என்றால் அது சமூக வலைதளம் தான், அனைவரும் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை கழிக்கின்றனர். இணையதளம் மாணவர்களுக்கு படிப்பதற்கு மட்டும் பயன்படுத்தினால் அது சிறந்ததாக இருக்கும், மாணவர்கள் வளர்ச்சிகளுக்கு இணையதளங்கள் உறுதியாக இருக்கும். ஆனால், அதிலேயே அதிக நேரத்தை கழித்தால் அவருடைய வாழ்வில் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று அர்த்தம்.