குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்பதால் பேரிடர் மீட்பு படையினர் 2,048 பேர் தயாராக உள்ளனர்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பருவ மழையை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆணையரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கான முன்னெச்சரிக்கை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக வரப்பெற்றுள்ளது.

அதன்படி இன்று (9ம் தேதி) பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் நாளை பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

11ம் தேதி பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். 11ம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தேசிய பேரிடர் மீட்பு படையினர் 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்ப் படையினர் 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: