ஒரே பெண்ணை இருவர் காதலித்ததால் விபரீதம் கத்தியால் குத்தி இளைஞரின் கை கிழிப்பு: 3 பேர் கைது

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் ஒரே பெண்ணை 2 பேர் காதலித்ததால் ஏற்பட்ட சண்டையில், இளைஞரின் கையை கத்தியால் குத்தி கிழித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சந்துரு (17), மங்கம்மாள் தோட்டத்தை சேர்ந்தவர் யுவராஜ் (22), சிவன் நகரை சேர்ந்தவர் கதிர் (19). இவர்கள் 3 பேரும் கூடுவாஞ்சேரியில் தங்கி வேலை பார்த்து வந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பவானி (20) என்ற பெண்ணை சந்துருவும், யுவராஜூம் காதலித்து உள்ளனர்.

இதுபற்றி தெரிந்து அவர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர். இவர்கள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து விட்டனர். மேலும் கடந்த 2ம்தேதி சந்துரு கூடுவாஞ்சேரியில் இருந்து பவானியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்து உள்ளார். இதை அறிந்த பவானியின் அக்கா திவ்யா, சந்துருவுக்கு போன் செய்து, தங்கச்சியை வீட்டிற்கு அழைத்து வந்துவிடு, இல்லையென்றால் போலீசில் புகார் அளிப்பேன் என்று கூறி உள்ளார். இதனால், சந்துரு கடந்த 6ம்தேதி பவானியை அழைத்துக்கொண்டு கூடுவாஞ்சேரியில் உள்ள அக்கா வீட்டில் விட்டுவிட்டார்.

இந்நிலையில், ஏற்கனவே கோபத்தில் இருந்த யுவராஜ், கதிர் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து, நேற்று கிராஸ் ரோட்டில் உள்ள சந்துரு வீட்டிற்கு சென்று தகராறு செய்து, கத்தியால் சந்துருவின் கையை குத்தி கிழித்துள்ளனர்.

இதுகுறித்து, சந்துரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் யுவராஜ், கதிர் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 பேரை புழல் சிறையிலும், சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.

Related Stories: