ஓஎம்ஆர் சாலையில் அரசுக்கு சொந்தமான ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், ஓஎம்ஆர் சாலையில் நாவலூரில் இருந்து மாமல்லபுரம் வரை 6 வழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. தன் ஒரு கட்டமாக கேளம்பாக்கம் அடுத்த படூர் பகுதியில் இருந்து கேளம்பாக்கம் வரை ஒரு புறவழிச்சாலையும், காலவாக்கத்தில் இருந்து திருப்போரூர் வழியாக ஆலத்தூர் வரை மற்றொரு புறவழிச்சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது.

கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் ஓஎம்ஆர் சாலையில் புல எண் 1401/15 சுமார் பரப்பளவு 2.12 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்திருந்தது. இந்நிலையில், நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைப்பதற்காக அவ்விடத்தை கையகப்படுத்த சென்றனர். இதை எதிர்த்து தனியார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை இல்லை என உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்தது.

இதைதொடர்ந்து, திருப்போரூர் வட்டாட்சியர் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள்தேவி தலைமையில், துணை வட்டாட்சியர்கள், நில அளவையர்,  கிராம நிர்வாக அலுவலர் உள்பட அரசு அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் சம்பந்தபட்ட தனியார் நிறுவன ஆக்கிரமிப்பில் இருந்த 2 ஏக்கர் 12 சென்ட் நிலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து தரமட்டமாக்கி மீட்டனர். மேலும், கடந்த 40 ஆண்டுகளாக அனுபவத்தில் வைத்திருந்த தென்னை மரம், அரசமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள், செடிகளை அகற்றி அவ்விடத்தை கையகப்படுத்தினர். கேளம்பாக்கம் தையூர் ஓஎம்ஆர் சாலையில் ஆக்கிரமிப்பில் வைத்திருந்த அவ்விடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.30 கோடி மேல் இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.

Related Stories: