எனது ரசிகர்கள் அடுத்த கட்டத்துக்கு வந்து விட்டனர்: பிறந்த நாளில் கமல்ஹாசன் பேச்சு

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு நேற்று 68வது பிறந்த நாள். இதை முன்னிட்டு, அவரது ரசிகர்களும், கட்சியினரும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையில உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 68 மணி நேர தொடர் மருத்துவ முகாம் நடந்தது. இதை கமல் பார்வையிட்டார். பின்னர் ரசிகர்களை சந்தித்த அவர் அவர்களிடையே பேசியதாவது: ஒரு நாளில் செய்வதல்ல நற்பணி, ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். அதுவே நான் விரும்பும் பிறந்த நாள் வாழ்த்து. இந்த பிறந்தநாளை காரணமாக வைத்து என் தோழர்கள் நற்பணியை அதிகரித்திருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து குக் கிராமம் வரை 68 பள்ளிகளுக்கு 68 கழிப்பிடங்களை கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இதுபோன்றவைதான் நற்பணி என்றில்லை, ரோட்டில் பள்ளம் இருந்தால் அரசு வந்துதான் மூட வேண்டும் என்று காத்திருக்காமல் நாமே மூடினால் அதுவும் நற்பணிதான். இந்த நற்பணிகளுக்கு எனது தோழர்களை 40 வருடமாக பயிற்சி கொடுத்து அழைத்து வந்திருக்கிறேன். அவர்கள் ரசிகர்கள் என்பதை தாண்டி இந்தியனாக, தமிழனாக தனது பங்கை செய்ய அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறார்கள்.

Related Stories: