திருவொற்றியூர்: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கனமழை கால சிறப்பு அதிகாரி கணேசன் ஐஏஎஸ் உத்தரவிட்டார். வடகிழக்கு பருவமழை துவங்கியதை முன்னிட்டு, சென்னையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மணலி மண்டல அலுவலகத்தில் நடந்தது. மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமை வகித்தார். உதவி ஆணையர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
மழைக்கால சிறப்பு அதிகாரி கணேசன் ஐஏஎஸ் கலந்துகொண்டு மண்டலத்துக்குட்பட்ட 8 வார்டுகளிலும் பருவமழை எதிர்கொள்ளும் வகையில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் உபகரணங்களில் தேவைகள் குறித்து கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மின்வாரியம் தீயணைப்பு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை துறை போன்ற அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, கணேசன் ஐஏஎஸ் பேசியதாவது: கடந்த பெருமழையின் போது மணலி புதுநகர், சடையங்குப்பம், ஆண்டார் குப்பம், எம்ஜிஆர் நகர் போன்ற பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.