சென்னை: புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் அமலுக்கு வரும் முன் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு புதிய சட்டம் அமலுக்கு வந்த நாளில் அப்போதைய நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயிக்க வேண்டும் என்று ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க கடந்த 2010ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த நிலத்திற்கான இழப்பீடு நில உரிமையாளருக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 2013ல் நிலம் கையகப்படுத்தல், நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவந்தது. இந்த சட்டம் 2014 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, சட்டம் அமலுக்கு வந்த நாளில் குறிப்பிட்ட நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயிக்கக் கோரி ஐகோர்ட்டில் வெங்கடேஷ்வரா கல்வி அறக்கட்டளை உள்ளிட்டோர் சார்பில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
