துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவந்த ரூ.20.3 லட்சம் தங்கத்தகடு பறிமுதல்: சென்னை பயணி கைது

மீனம்பாக்கம்: துபாயில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு டிவிடி பிளேயரில் மறைத்து கடத்தி வந்த ரூ.20.3 லட்சம் மதிப்பிலான தங்கத்தகடு மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக சென்னை பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர். துபாயில் இருந்து நேற்றிரவு ஒரு பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது.

அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி உடைமைகளை சோதனை செய்தபோது, அவரது பெட்டிக்குள் ஏராளமான மின்னணு சாதனங்கள், வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. அதில் இருந்த ஒரு டிவிடி பிளேயரை சந்கேத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதற்குள், ரூ.17.15 லட்சம் மதிப்பில் 385 கிராம் எடையிலான தங்கத்தகடு மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

மேலும், அதே பயணி உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3.15 லட்சம் மதிப்பிலான மின்னணு சாதனங்கள், வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் என மொத்தம் ரூ.20.3 லட்சம் மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட் பொருட்களை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, சென்னை பயணியை கைது செய்தனர். அவரிடம் சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவரா அல்லது தனிப்பட்ட முறையில் யாருக்கேனும் இவற்றை கடத்தி வந்துள்ளாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: