தேர்தல் நடக்க உள்ள நிலையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த சிறப்பு குழு: குஜராத் பாஜ அரசு அதிரடி

அகமதாபாத்: குஜராத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த சிறப்பு குழுவை அமைப்பது என ஆளும் பாஜ அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, பாஜ மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதைத் தொடர்ந்து, பாஜ ஆளும் மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை மும்முரமாக செய்து வருகின்றன. உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநில அரசுகள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழுவை அமைத்துள்ளன.

இந்நிலையில், குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த சிறப்பு குழு அமைப்பது என அம்மாநில அரசு நேற்று அறிவித்தது. இதற்கு முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் நடந்த மாநில அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி நேற்று தெரிவித்துள்ளார். குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பாஜ அரசு இந்த முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா கூறுகையில், ‘‘ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமயில் சிறப்பு குழு அமைக்கப்படும். அதில் 4 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்’’ என்றார்.

Related Stories: