சென்னை பல்கலை செனட் உறுப்பினராக மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர் அமுதா போட்டியின்றி தேர்வு

சென்னை: சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக திமுக கவுன்சிலர் அமுதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை (செனட்) உறுப்பினர் தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங்கில் நேற்று நடந்தது. இதற்கான தேர்தலை சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி நடத்தினார். கூட்டம் தொடங்கியதும், மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி, சென்னை பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினர் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரை தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் கடிதம் மூலம் கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தப்படுகிறது என்றார். எனவே, இந்த பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். வேட்புமனுவை தாக்கல் செய்பவர்களின் வேட்புமனுவை ஒருவர் முன்மொழிய வேண்டும், ஒருவர் வழிமொழிய வேண்டும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து, செனட் உறுப்பினர் பதவிக்கு சென்னை மாநகராட்சி 68வது வார்டு திமுக கவுன்சிலர் பி.அமுதா வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்ய குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அமுதாவை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதை தொடர்ந்து அமுதா போட்டியின்றி சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ககன்தீப் சிங் பேடி அறிவித்தார். இதை தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து, செனட் உறுப்பினர் பதவிக்கான சான்றிதழை ககன்தீப் சிங் பேடி வழங்கினார். இதையடுத்து, மற்ற கவுன்சிலர்கள் செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அமுதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Stories: