ராஜராஜ சோழனின் 1037வது சதயவிழா; தஞ்சை மாவட்டத்துக்கு நவ.3ம் தேதி உள்ளூர் விடுமுறை: பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

தஞ்சை: மாமன்னன் ராஜராஜசோழனின் 1037வது சதய விழாவை முன்னிட்டு வரும் 3ம் தேதி தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறி உள்ளார். தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழா தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. வரும் 2ம்தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெறுகிறது. 3ம் தேதி பெருவுடையார், பெரியநாயகிஅம்மனுக்கு பேரபிஷேகம், ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சதயவிழாவையொட்டி பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாமன்னன் ராஜராஜசோழனின் 1037வது சதய விழா வரும் 3ம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அன்றைய தினத்துக்கு பதிலாக வருகிற 12ம்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக, தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: