டிவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய சில மணி நேரங்களில் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், நிதி அதிகாரியை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க்..!!

சான் பிரான்சிஸ்கோ: ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க், டிவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெத்செகல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், இந்திய ரூபாய் மதிப்பில், மூன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்குவதாக உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அறிவித்திருந்தார். பின் சில வாரங்களில் டிவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க மறுப்பதால் ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என்றார். இதனை எதிர்த்து டிவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஒப்பந்தத்தை தட்டி கழிக்க இதுபோன்ற காரணங்களை எலான் மஸ்க் கூறுவதாக குற்றம்சாட்டியது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 28க்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது. இந்த நிலையில் எலான் மஸ்க் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள டிவிட்டரின் தலைமையகத்திற்கு நேற்று சென்றார். ஒப்பந்தம் முடிந்தவுடன் அவர் டிவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெத்செகல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார். அவர்கள் உடனடியாக டிவிட்டர் நிறுவனத்தின் தலைமையகத்தை விட்டு வெளியேறினர். இந்த நிலையில் டிவிட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க்கிற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே டிவிட்டரில் நீக்கப்பட்ட தனது கணக்கு வரும் திங்கள் முதல் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: