சேலத்தில் வீடு புகுந்து காதலியின் தந்தையை அடித்து காலை உடைத்த காதலன்: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

சேலம்: சேலத்தில் வீடு புகுந்து காதலியின் தந்தையை அடித்து காலை உடைத்த காதலன், பொதுமக்கள் பிடிக்க முயன்றதால், மாடியில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்தவர் சீனிவாசன்(55), டெய்லர். இவரது 21 வயது மகள், கல்லூரியில் படித்து வருகிறார். அவரை பொன்னம்மாபேட்டை அண்ணா நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரஞ்சித் (25), 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ரஞ்சித்தை பார்ப்பதை, அந்த மாணவி தவிர்த்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், நேற்று முன்தினம் இரவு அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று, அவரை பார்த்து பேச அனுமதிக்கும்படி தந்தை சீனிவாசனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து விரட்டியுள்ளார். ஆனால், வெளியே செல்ல மறுத்த ரஞ்சித், சீனிவாசனிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். அவரை கீழே தள்ளி அடித்து உதைத்து, வலது காலில் பலமாக மிதித்துள்ளார். அதில் கால் முறிந்ததால், சீனிவாசன் வலியால் அலறினார். அதேநேரம் ரஞ்சித், காதலியை பார்க்க வீட்டின் மாடிக்கு ஏறி மாணவியை பிடித்து இழுத்துச் செல்ல முயன்றார்.

அக்கம் பக்கத்தினர் பிடிக்க முயன்றதால் அவர், மொட்டை மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தார். தகவலின் பேரில், அம்மாபேட்டை போலீசார் வந்து ரஞ்சித்தை கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் அவர் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்வதாக மிரட்டினார். இதையடுத்து பக்கத்து வீட்டு மாடி வழியாக ஏறிய போலீசார், அவரை  மடக்கி பிடித்தனர். அப்போது அவர், தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டதாக கூறியதால், அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கிருந்து தப்பியோடி விட்டார். 

Related Stories: