வில்லிவாக்கத்தில் பரபரப்பு பெண் அதிகாரியிடம் ரூ. 49 லட்சம் 51 பவுன் நகை துணிகர மோசடியில் ஈடுபட்டவர் கைது

அம்பத்தூர்: சென்னையில் பெண் அதிகாரியிடம் ரூ.49 லட்சம் மற்றும்  51 பவுன் நகையை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை வில்லிவாக்கத்தில் வசித்து வருபவர் வளர்மதி(57). இவர் தொழிலாளர் துறையில் உதவி ஆணையராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்,  இவர் வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார் அதில், கடந்த 2009ம் ஆண்டு வளர்மதி அண்ணாநகரில் ஆய்வாளராக பணியாற்றியபோது, திருவொற்றியூரை சேர்ந்த கணேஷ்குமார் அறிமுகமானார். தங்களுக்கு தெரிந்த நிறுவனங்களில் அறிமுகம் செய்து வைத்தால் தொழிலாளர் தொடர்பான வேலைகளை அந்த நிறுவனங்களுக்கு செய்து கொடுத்து வருவாய் ஈட்டி கொள்வேன் என தெரிவித்தார்.

இதன் பின்னர் தம்பி போல அவரை பாவித்து வந்தேன். இந்நிலையில் வீட்டு கடனை அடைப்பதற்காக வெளியில் வாங்கிய ரூ.40 லட்சம் மற்றும் வங்கியில் வாங்கிய கடன் ரூ.9 லட்சம் என மொத்தம் ரூ.49 லட்சம்  கணேஷ்குமாரிடம் கொடுத்து வைத்திருந்தேன். இதற்கிடையே, கணேஷ்குமார் வீடு புகுந்து 60 பவுன் நகையையும் எடுத்து சென்றுவிட்டார். இந்த பணத்தையும், நகையையும் கடந்த 2019ம் ஆண்டு திருப்பி கேட்டபோது கணேஷ்குமார் அதை வைத்து இடம் மற்றும் வீடு வாங்கி விட்டேன் என தெரிவித்தார். 6 மாதங்களுக்குள் இந்த பணத்தை தந்து விடுவதாகவும், அவர் தெரிவித்தார். இதன் பின்னர் அவர் திருப்பி தராமல் இதுநாள் வரை மோசடியாக ஏமாற்றி வருகிறார். எனவே கணேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதிகாரி வளர்மதி  அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். இது தொடர்பாக வில்லிவாக்கம் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர் ஏமாற்றியது உறுதியானது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்மதியின் ரூ.49 லட்சம் பணம் மற்றும் நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கணேஷ்குமார் போலீஸ் விசாரணையின்போது ஏற்கனவே 9 பவுன் நகைகளை திருப்பி கொடுத்திருப்பதாகவும், மீதமுள்ள 51 பவுன் நகைகளையும், பணத்தையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர், நேற்று கைது செய்யப்பட்டு, கோர்ட்டு உத்தரவின் பேரில் போலீசார் அவரை கைது செய்து  புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: