தடுமாறும் லிஸ் டிரஸ்!: இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் அமைச்சர் சுவெல்லா பிரேவர்மென் திடீர் ராஜினாமா..விதிகளை மீறிவிட்டதாக ட்வீட்..!!

லண்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் அமைச்சர் சுவெல்லா பிரேவர்மென் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தவர் சுவெல்லா பிரேவர்மென். இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சுவெல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தாம் தவறு செய்துவிட்டதாகவும், விதிகளை மீறி விட்டதாகவும் சுவெல்லா தெரிவித்துள்ளார். பதவி விலகல் கடிதத்தினை பிரதமர் லிஸ் டிரஸ்ஸிற்கு சுவெல்லா பிரேவர்மென் அனுப்பியுள்ளார்.

கடந்த 14ம் தேதி நிதியமைச்சர் கவாசி கவார்தெங் நீக்கப்பட்டு ஜெர்மி ஹன்ட் பிரிட்டன் அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது சுவெல்லா பதவி விலகியிருக்கிறார். பிரிட்டனில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் சூழலில் அமைச்சரவையில் இருந்து சுவெல்லா ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகவேண்டும் என்று ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகினார். கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக முடியும். இதன்படி கட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார். நடப்பு பட்ஜெட்டில் பல்வேறு வரிச் சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என சமீபத்தில் அறிவித்தார் என்பது நினைவுகூரத்தக்கது. இதற்கிடையே, ரிஷி சுனாக்கை பிரதமராக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

Related Stories: