திருப்பூர் காப்பகத்தில் 3 மாணவர்கள் பலியான விவகாரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல பெண் அலுவலர் அதிரடி சஸ்பெண்ட்

திருப்பூர்: திருப்பூர் தனியார் காப்பகத்தில் 3 குழந்தைகள் பலியான விவகாரத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல பெண் அலுவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருப்பூர்- அவினாசி ரோடு பூண்டி ரிங் ரோட்டில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு ஆதரவற்ற மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட மாணவர்கள் மற்றும் சிலர் தங்கி உள்ளனர். அந்த மாணவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வந்தனர். கடந்த 5ம் தேதி இரவு மாணவர்களுக்கு ரசம் சாதம் மற்றும் லட்டு வழங்கப்பட்டது.

இதை சாப்பிட்டு வாந்தி, மயக்கம் அடைந்தவர்களில் மருத்துவமனையில் 10ம் வகுப்பு மாணவர் மாதேஷ் (15), 6ம் வகுப்பு மாணவர் பாபு (13), 4ம் வகுப்பு மாணவன் ஆதிஷ் (8) ஆகிய 3 பேர் பலியாகினர். 11 மாணவர்கள் மற்றும் ஒரு காவலாளி சிகிச்சை பெற்று குணமடைந்தனர். இது குறித்து தி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி காப்பகத்தை ஆய்வு செய்த சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தை மூடப்படும் எனவும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சித பிரியா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து காப்பகம் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியா (35) நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Related Stories: