பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ம.சிந்தனை செல்வன் (விசிக) வீராணம் ஏரியைத் தூர்வாரி அதன் கொள்ளவை உயர்த்த அரசு முன்வருமா என்று கேட்டார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: வீராணம் ஏரி 2018ல் தூர்வாரப்பட்டது. அரசு விதிகளின்படி மூன்று ஆண்டுக்கு ஒரு முறைதான் தூர் வாரப்படும். தற்போது கொள்ளளவு நிறைய தண்ணீர் இருக்கின்ற காரணத்தால் தண்ணீர் குறைகிறபோது, தண்ணீர் வடிந்த பிறகு தூர்வாரும் பணி எடுத்துக்கொள்ளப்படும். இப்போது 2021ம் ஆண்டு தமிழ்நாடு நீர்வள பாசன விவசாய நவீனமயம் மற்றும் நீர் நிலைகள் மீட்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ.73.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 9 ஒழுங்கிகள் கட்டப்பட்டு பிரதான கரை பலப்படுத்துகின்ற பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.