தண்டையார்பேட்டையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை: 10 பேர் கும்பலுக்கு வலை

சென்னை: தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி 10 பேர்  கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை கொண்டித்தோப்பு வுட் வார்ப்பு பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக ஏழுகிணறு போலீசாருக்கு நேற்று இரவு  பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் தண்டையார்பேட்டை சிவாஜி நகரை சேர்ந்த சதீஷ் (எ) குண்டு சதீஷ் (22), பிரபல ரவுடி என்பது தெரியவந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் மனோன்மணி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், ரவுடியும் கஞ்சா வியாபாரியுமான  இட்டா அஜித் தலைமையில் 10 பேர் கும்பல் சதீஷை வெட்டி கொலை செய்து விட்டு உட் வார்ப் கால்வாய் ஓரம் வீசிவிட்டு தப்பியது தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட சதீஷ் போலீஸ் இன்பார்மராக செயல்படுகிறார் என நினைத்து அவரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் சதீஷ் மீது வியாசர்பாடி, திருவொற்றியூர், கொடுங்கையூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் ஏழுகிணறு போலீசார் இருவரை பிடித்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: