ராஜமங்கலம் பகுதியில் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 7 பேர் கைது

பெரம்பூர்: சென்னை ராஜமங்கலம் தாதா குப்பம் ரயில்வே மேம்பாலம் அருகே சிலர் மது அருந்தி வருவதாகவும், கையில் சில ஆயுதங்களை வைத்துள்ளதாகவும் ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற ராஜமங்கலம் போலீசார் அங்கிருந்த 7 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

அதில், புழல் பகுதியை சேர்ந்த கார்த்திக் (24), ஆறுமுகம் (25), யுவராஜ் (27), ஜான் (18),  சாந்தபிரபு (26) மற்றும் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த மதன் (19), செங்குன்றம் பகுதியை சேர்ந்த சதீஷ் (30) என்பதும், இவர்களில் ஆறுமுகம் மற்றும் கார்த்திக் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் அனைவரும் ராஜமங்கலம் பகுதியில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: