மாஸ்கோ: ஈரானிடம் இருந்து வாங்கிய ‘கமிஹாசி’ டிரோன் விமானங்கள் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தியதால் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நேற்றுடன் 237வது நாளை எட்டியது. போரில் கைப்பற்றிய லுஹான்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டது. இதனால் 3ம் உலகப்போருக்கு வழிவகுக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவி அளித்து வருகின்றன. இந்நிலையில், போரில் ஏராளமான ஆயுதங்களை ரஷ்யா இழந்து விட்ட நிலையில், தனது தாக்குதலில் புதிய பாணியை கையில் எடுத்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி நேற்று காலை ரஷ்யா வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஏராளமான டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. அவை பல குடியிருப்புகள், கட்டிடங்களை தகர்த்தது.