லண்டன்: இங்கிலாந்தில் தனது தோழியின் தலையை துண்டித்து எறிந்துவிட்டு, உடலை சூட்கேசில் அடைத்து லண்டன் தெருக்களில் சுற்றித் திரிந்த பெண் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து நகரின் சாலையோரம் கடந்தாண்டு ஜூன் 27ம் தேதி பெண் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலை கண்டுப்பிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மீ குயென் சோங் (67) என்பது தெரியவந்தது. இவரை அவரது தோழி ஜெம்மா மிட்செல் (37) என்பவர் கொன்றதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான, சிசிடிவி பதிவுகள் மற்றும் அறிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர். அதில், சம்பவ நாளன்று தனது தோழி மீ குயென் சோங்கை கொன்று, அவரது தலைபாகத்தை தெருவோரம் வீசி எறிந்துவிட்டு ஜெம்மா மிட்செல் சென்றுள்ளார். தோழியின் உடலை துண்டு துண்டாக வெட்டியெடுத்து, அதனை தனது நீல நிற சூட்கேஸில் அடைத்து, லண்டன் தெருக்களில் இரண்டு மணி நேரம் இழுத்துச் சென்றுள்ளார்.
இவையாவும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதன்பின் மீ குயென் சோங்கின் தலை துண்டிக்கப்பட்ட சடலத்தை 200 மைல்களுக்கு அப்பால் புறநகரில் தூக்கி எறிந்துவிட்டு சென்றுள்ளார். தோழியின் சொத்தை அபகரிக்க அவரை ஜெம்மா மிட்செல் கொன்றது விசாரணையில் தெரியவந்தது என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தான் தோழி மீ குயென் சோங்கை கொலை செய்யவில்லை என்று ஜெம்மா மிட்செல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனால் இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.