புதுடெல்லி: கொரோனா பரவல் விவகாரத்தில் அவதூறு கருத்து தெரிவித்த யூடியூபர் மாரிதாசுக்கு எதிராக, தமிழக காவல் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியபோது, தப்லிக் ஜமாத் குறித்தும், கொரோனா பரவலுக்கு அவர்கள்தான் காரணம் என்பது போலவும் யூடியூபர் மாரிதாஸ் தனது வலைதளத்தில் வீடியோ பதிவிட்டார். இது தொடர்பாக அளித்த புகாரின்பேரில் மாரிதாசை, மேலபாளையம் போலீசார் மீண்டும் கைது செய்தனர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாரிதாஸ் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாரிதாசுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக போலீசார் நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.