9 பாடப் பிரிவுகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு இன்று கவுன்சலிங்: சென்னையில் நடக்கிறது

சென்னை: அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 9 பாடங்களுக்கான ஆசிரியர் நியமன கவுன்சலிங் இன்று சென்னையில்  நடக்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 2,849 முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களில் மேற்கண்ட ஆசிரியர் பணிக்கு தகுதியுள்ளவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தாவரவியல், விலங்கியல், அரசியல் அறிவியல், வரலாறு, புவியியல், மனையியல், கணினி பயிற்றுநர் நிலை1, உடற்கல்வி இயக்குநர் நிலை1, ஆகிய பாடங்களில் பணிநியமனம் செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான நேரடி நியமன கவுன்சலிங் இன்று (14ம் தேதி) சென்னையில் நடக்கிறது. கவுன்சலிங் நடக்கும் இடங்களை பொறுத்தவரையில் சென்னை எழும்பூரில் உள்ள மாகாண பெண்கள் மேனிலைப் பள்ளியில், அரசியல் அறிவியல், வரலாறு, புவியியல், மனையியல், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு நடக்கிறது. நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் கட்டிடம் முதல் தளத்தில் தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான கவுன்சலிங் நடக்கிறது.

Related Stories: