மணவாளக்குறிச்சி அருகே சோகம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் போலீஸ் விபத்தில் பலி: வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது

குளச்சல் : மணவாளக்குறிச்சி அருகே நேற்று முன் தினம் இரவு இரு பைக்குகள் மோதி நடந்த விபத்தில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த பெண் போலீஸ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (38). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உஷா (37). இவர் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகின்றன. 7 வயதில் ஒரு மகன் உள்ளான். உஷா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன் தினம் இரவு 7.30 மணியளவில் பணி முடிந்து, தனது மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

வெள்ளமோடி - அம்மாண்டிவிளை சாலையில் கட்டைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே செல்லும் போது எதிரே அதி வேகமாக பைக்கில் வந்த சஞ்சய் (19) என்பவர் உஷாவின் மொபட் மீது மோதினார். இதில் உஷா தூக்கி வீசப்பட்டு  படுகாயமடைந்தார். அவரை நாகர்கோவிலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் உஷா, நள்ளிரவில் இறந்தார். இந்த விபத்தில் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.  இந்த விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  உஷாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நிறைமாத கர்ப்பிணியான பெண் போலீஸ் உஷா, விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: