ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், முதல்வருக்கு நெருக்கமான சில அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரது வீடுகளில் நேற்று அதிகாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ராய்ப்பூர், ராய்கர், மகாசமுந்த், கோர்பா என பல்வேறு மாவட்டங்களில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதிகாலை முதல் நேற்றிரவு வரை அதிகாரிகள் சோதனை நடத்தினர். எதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. கடந்த மாதம், எக்கு, நிலக்கரி சுரங்க தொழிலதிபர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், கடந்த ஜூன், ஜூலை மாதத்திலும் நிலக்கரி தொழிலதிபர்கள், முதல்வர் அலுவலக அரசு அதிகாரிகள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைகளைத் தொடர்ந்து தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது.