32 அனாதை சடலங்கள் ஒரே இடத்தில் அடக்கம்-தஞ்சாவூர் போலீசாரின் சேவை

தஞ்சாவூர் : 32 அனாதை சடலங்களை தஞ்சாவூர் போலீசார் சேவையுடன் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர்.தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் அடையாளம் தெரியாத , பெயர் தெரிந்த என 32 சடலங்கள் கடந்த சில மாதங்களாக இருந்தன.இதில் 6 பெண்கள், 2 குழந்தைகள், 24 ஆண்கள் அடங்கும். இந்த உடல்களுக்கு யாரும் உரிமை கோராவிட்டால் 1 வாரத்தில் அடக்கம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் உரிமம் கோரவில்லை. இதையடுத்து 32 உடல்களையும் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மனோகரன், போலீஸ் ஏட்டு ரகுநாதன் ஆகியோர் சேர்ந்து 32 உடல்களையும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சாந்திவனம் சுடுகாட்டிற்கு நேற்று கொண்டு சென்றனர். பின்னர் அங்கு பொக்ளின் இயந்திரம் மூலம் ராட்சத குழி தோண்டப்பட்டு அதில் 32 உடல்களும் அடுக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. அங்கு இறந்தவர்களுக்கு, என்னென்ன சடங்கு, சம்பிரதாயங்கள் செய்யப்படுமோ அனைத்தும் செய்யப்பட்டு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

இன்ஸ்பெக்டர் மனோகரன், ஏட்டு ரகுநாதனும் 3 ஆண்டுகளில் 150 க்கும் மேற்பட்ட அனாதை சடலங்களை தங்களது சொந்த செலவில் அடக்கம் செய்துள்ளனர். தற்போது மன்னார்குடியை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனமும் இணைந்து அடக்கம் செய்வதற்கு உதவி செய்துள்ளது. இறந்தவர்கள் யாரும் இல்லாததால் இவர்கள் இருவரும் இதனை ஒரு சேவையாக கருதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: